ரூ.17 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்களுடன் மாயமான லாரி: காவல்துறையினர் விசாரணை
திருச்சி, ஆக.20- திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கு லாரியில் அனுப்பப்பட்ட ரூ.17 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்கள் மாயம்.
திருச்சி திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 40). இவர் பொருட்கள் பாதுகாப்பு வைப்பறை நிறுவனம் நடத்தி வருகிறார். நாகேந்திரன் தனது நிறுவனத்தில் இருந்து அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை தமிழகத்தின் பல்வேறு சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் பெரிய கடைகளுக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.
இங்கு மேற்பார்வையாளராக முசிறி பெரியார் நகரை சேர்ந்த சதீஷ் மற்றும் பெரியண்ணன் உள்ளிட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ரூ.16 லட்சத்து 96 ஆயிரத்து 346 மதிப்பிலான மளிகை பொருட்கள் சிவங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த லாரி டிரைவர் புவனேஸ்வரன் மூலம் நாகர்கோவிலில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அந்த பொருட்கள் நாகர்கோவிலுக்கு சென்று சேரவில்லை. லாரி டிரைவர் புவனேஸ்வரனை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இது குறித்து நாகேந்திரன் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தார். அதில் சதீஷ், பெரியண்ணன், புவனேஸ்வரன் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். அதன் பேரில் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.