கல்வித்தந்தை துளசி அய்யா வாண்டையார் மறைவு: திருச்சி சிவா எம்.பி. இரங்கல்
கல்வித்தந்தை என்ற பெயருக்கு இலக்கணமாக தஞ்சைத் தரணியில் வாழும் ஏழை உழவர்குடி பிள்ளைகளுக்கு பொருள் கொள்ளாமல் உயர்கல்வி ஈந்த தொண்டு உள்ளம், கம்பீரமான ஆரோக்கியமான உடல், தும்பைப்பூ வெள்ளை உடை, புன்னகை மாறா முகம், தமிழ்ப் புலமை, ஜாதி மத, ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு பார்வையின்றி எல்லோரையும் ஒன்றென கருதும் பெருந்தன்மை, மக்கள் தொண்டையும், மகேசன் தொண்டையும் ஒன்றென கொண்டு வாழ்ந்த மனிதருள் மாணிக்கம் பூண்டி ஐயா துளசி வாண்டையார் அவர்களின் மறைவுச் செய்தி அளவிடமுடியா வேதனை தருகிறது. வாழ்க்கைக்கு நல் இலக்கணம் தந்து அதன் வழிநின்று வாழ்ந்து காட்டிய உத்தமர் அவர். என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். பூண்டி கல்லூரியில் மாணவர்களிடையே உரையாற்ற சென்ற 1986ம் ஆண்டிலிருந்து சற்றேறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவரிடம் நெருக்கமும், நேசமும் கொள்ளும் வாய்ப்பினை பெற்றிருக்கிறேன். என்னுடைய பாராளுமன்றப் பணிகளை காணும்போதெல்லாம் வெகுவாகப் பாராட்டி உற்சாகம் தரும் அவரின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கும், தஞ்சைத் தரணிக்கு மட்டுமல்லாமல் மொத்த தமிழ்ச் சமுதாயத்திற்கும், தமிழ் இலக்கிய உலகிற்கும் பேரிழப்பு. ஈடில்லா பெருவாழ்வு வாழ்ந்து மறைந்திருக்கும் அவர் கூறிய, வாழ்ந்து காட்டிய நெறிமுறைகளின்படி வாழ்ந்து காட்டுவதே அவருக்கு நாம் செலுத்துகின்ற உண்மையான அஞ்சலியாக இருக்கும்!