திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவா் சா.பீட்டா் அல்போன்ஸ், துணைத் தலைவா் டாக்டர் மஸ்தான் மற்றும் ஆணையக்குழு உறுப்பினர்கள் வருகின்ற 27-ந்தேதி திருச்சி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளனர். சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளையும் 27-ந் தேதி அன்று காலை 11.00 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் சந்தித்து சிறுபான்மையினருக்கென தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும் கருத்துக்களை கேட்டறியவும் உள்ளனர்.
இதில் சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினத்தைச் சார்ந்த பொதுமக்களின் பிரதிநிதிகள் யாவரும் மாநில சிறுபான்மையினா் ஆணையக்குழுவினரைச் சந்தித்து தங்களது குறைகளையும், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், சிறுபான்மையினர் நல மேம்பாட்டிற்கான கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.