“100 கோடி தடுப்பூசி சாதனை” – வடிவமைத்து கொண்டாடிய திருச்சி அரசு பள்ளி
கடந்த இரண்டு வருடங்களாக “கொரோனா” என்னும் என்னும் வார்த்தையை ஒவ்வொரு நாளும் ஒலிக்காமல் இருந்திருக்க முடியாது. அன்றாட வாழ்வை நகர்த்தி கொண்டு இருக்கும் இந்த வேளையில் பேரிடியாய் விழுந்த இந்த கொரோனா நோய்த்தொற்று கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக சொல்லொணாத் துயரில் ஆழ்த்தி இருக்கின்றன.

இந்த கொரோனா பேரிடர் காலங்களிலும் களத்தில் நின்று பணியாற்றிய முன் களப்பணியாளர்கள் ஒவ்வொருவரும் பாராட்டுக்குரியவர்கள். குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள் என அர்ப்பணிப்புடன் செயல்பட்டு தற்போது கொரோனாவை வெல்லும் பேராயுதம் தடுப்பூசியை இந்தியாவில் 100 கோடி பேருக்கு செலுத்தி புதிய சாதனையை படைத்துள்ளனர்.
இந்த நிலையில் 100 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தியதை கொண்டாடும் வகையில் திருச்சி அருகே உள்ள அரசுப்பள்ளி சார்பாக பிரம்மாண்டமான ஊசியை 100 என்ற எழுத்தின் மேல் இருப்பது போல் வடிவமைத்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் ஊனையூரில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் தான் பிரம்மாண்டமான ஊசியை 100 என்ற எழுத்தின் மேல் இருப்பது போல் வடிவமைத்து அதனை சுற்றி நின்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மேலும் இதுகுறித்து ஊனையூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சற்குணன் கூறுகையில்… “கொரோனா இக்கட்டான காலகட்டங்களில் களத்தில் நின்று பணியாற்றிய அனைவருமே பாராட்டுக்குரியவர்கள். உலக நாடுகளே எட்ட முடியாத இந்த சாதனையை இந்தியா தற்போது 100 கோடி பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தி சாதனை படைத்திருக்கிறது. இதனை கொண்டாடும் வகையில் எங்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பாக சிறு முயற்சியாக இதனை செய்தோம்” என்றார்

ஊனையூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சற்குணன்
மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராஜசேகர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo