ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு சார்பில் போதை இல்லா தமிழ்நாடு மக்கள் விழிப்புணர்வு பரப்புரை
திருச்சி, ஆக. 14 திருச்சியில் ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு சார்பில் போதை இல்லா தமிழ்நாடு மக்கள் விழிப்புணர்வு பரப்புரை
திருச்சி மாவட்ட ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு சார்பில் போதை இல்லா தமிழ்நாடு என்ற மது மற்றும் போதைக்கு எதிரான மக்கள் விழிப்புணர்வு பரப்புரை நாளை மறுநாள் சுதந்திர தினத்தன்று தொடங்கி 30 தேதி வரை நடைபெறுகிறது.
இது தொடர்பான விளக்க கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது.
மது மற்றும் போதைக்கு எதிரான மக்கள் விழிப்புணர்வு பரப்புரை மாநில ஒருங்கிணைப்பாளர் முகமது ரியாஸ் பரப்புரை விளக்க உரையாற்றினார்.
அப்போது அவர் பேசும்போது,
தமிழ்நாட்டை மது மற்றும் போதை பொருட்கள் இல்லாத ஆரோக்கியமான மாநிலமாக மாற்றும் நோக்கத்தில் இந்த விழிப்புணர்வு பரப்புரையை மேற்கொள்ள இருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
எங்கள் அமைப்பு சார்பில் திருச்சி மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் சமூக வலைதளங்கள் மற்றும் பல்வேறு வகைகளில் 5 லட்சம் பேரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உடனடி பூரண மதுவிலக்கு ஒன்றே இதற்கு தீர்வாகும்.
மதுவிலக்கை கொண்டு வர தமிழக அரசு இந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே ஒரு குழுவை அமைத்து அதன் பரிந்துரையின் அடிப்படையில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றார்.
இந்த பரப்புரை இலட்சினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சி துறை மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் பாப்பு
பெஞ்சமின் வெளியிட்டார்.
நிகழ்வில் ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான், மகளிர் அணி மாவட்ட தலைவர் மும்தாஜ், மாவட்ட செயலாளர் கமாலுதீன், மாவட்டத் தலைவர் ரியாஸ்,
எஸ்.ஐ.ஓ. மாவட்ட தலைவர் அப்துல் அஜீஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.