பெட்ரோல்-டீசல், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர் இந்திரஜித் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து கட்சி அலுவலகத்தில் இருந்து ஒரு மொபட்டை பாடையில் கட்டி கட்சி நிர்வாகிகள் தோளில் சுமந்து வந்தனர். இறுதி ஊர்வலம் போல் நடைபெற்ற நிகழ்வில் ஒருவர் கொல்லி வைப்பது போல் மண் சட்டியை சுமந்து கொண்டு வந்தார்.
முன்னதாக சிலர் தப்படித்துக் கொண்டு செல்ல ஒப்பாரி வைத்தப்படி சென்றனர். இதில் அய்யய்யோ அய்யய்யோ பெட்ரோல், டீசல் விலை ஏறிடுச்சே உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் கூறி ஒப்பாரி வைத்தனர். பஸ் நிலையம் அருகே வந்து இந்த ஊர்வலம் நிறைவு பெற்றது. பலரும் சைக்கிளில் ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து பாடைகட்டி தூக்கி வந்தத மொபட்டை ஏலம் விடும் நிகழ்வு நடைபெற்றது. அதில் ஒரு பைசாவிற்கு கூட யாரும் ஏலம் எடுக்கவில்லை.