ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்
திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். இதில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடையே லஞ்சம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம் என்பதை வலியுறுத்தி, லஞ்சம் கொடுப்பதை தவிர்ப்பதற்காக திருச்சி தூய வளனார் கல்லூரி மாணவர்களை வைத்து விழிப்புணர்வு நாடகங்களை நடத்தினர்.
சத்திரம் பஸ் நிலையத்தில் கூடியிருந்த பொதுமக்களுக்கு முன்னதாக கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு இசை நடனங்களும் நடத்தப்பட்டது. முன்னதாக லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர் என்று அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வினியோகித்தனர். அப்போது பறை இசையுடன் மாணவர்கள் விழிப்புணர்வு பரப்புரையில் ஈடுபட்டனர்.