கோவில் கும்பாபிஷேகத்திற்கு வந்த சிறுமி பள்ளி வேன் மோதி உயிரிழப்பு
திருச்சி, ஆக.30 திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே காட்டுப்புத்தூர் பகுதியிலுள்ள மாமரத்துப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பட்டாயி அம்மன், காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர், நாமக்கல் மாவட்டம், செல்லப்பம்பட்டி கிராமம் காதம்பள்ளி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் தனது மனைவி மற்றும் 5 வயது பெண் குழந்தை பைரவி மற்றும் உறவினர்களுடன் கும்பாபிஷேக விழாவிற்கு வந்துள்ளார்.
அப்போது அந்த சிறுமி சாலையோரம் சிறுநீர் கழிப்பதற்காக சென்றபோது அந்த வழியாக தொட்டியத்திற்கு மாணவ, மாணவிகளை தனியார் பள்ளிக்கு ஏற்றி வந்த பள்ளி வாகனம் எதிர்பாராதவிதமாக பைரவி மீது மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே சிறுமி பைரவி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் காட்டுப்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிந்து தனியார் பள்ளி வேன் டிரைவர் பழனிசாமி (58) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், முசிறி அருகே கும்பாபிஷேக விழாவிற்கு வந்த 5 வயது சிறுமி தனியார் பள்ளி வேன் மோதியதில் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.