ஆடி அமாவாசை : அம்மா மண்டபத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபாடு
தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் இந்துக்கள் நீர்நிலைகளில் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர் நினைவாக தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக நீர் நிலைகளில் பொதுமக்கள் கூடவும், வழிபாடு நடத்தவும் அரசு தடை விதித்து இருந்தது. இந்த ஆண்டு கொரோனா கட்டுக்குள் இருக்கும் நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஆடி அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் (திதி) கொடுப்பதற்காக திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் தங்கள் வம்சம் செழிக்கவும், முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும் தர்ப்பணம் கொடுத்து ஆற்றில் பிண்டம் கரைத்து வழிபட்டனர். இதையும் படியுங்கள்: ஆடி அமாவாசை: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு இதற்காக 500-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், புரோகிதர்கள் அம்மா மண்டபத்தில் திரண்டிருந்தனர். மேலும் காவிரியில் தற்போது தண்ணீர் இருகரைகளையும் தொட்டு கரைபுரண்டு செல்வதால் ஆற்றில் இறங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தர்ப்பணம் கொடுப்பவர்கள் அனைவரும் மண்டப கரைகளில் அமர வைக்கப்பட்டனர். இதில் ஒரு சில இடங்களில் 10 முதல் 30-க்கும் மேற்பட்டோரை ஒரே இடத்தில் வரிசையாக அமர வைத்து அவர்களது மூதாதையர்களின் பெயர்களை கூறி வேத மந்திரங்களை ஓதினர். பின்னர் பச்சரிசி மாவு, எள், வாழைப்பழம், தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பிண்டமாக பிடித்து மந்திரங்கள் ஓதிய பின் அவற்றை ஆற்றில் கரைத்து தங்கள் முன்னோர்களை நினைத்தும், அவர்களின் ஆசி வேண்டியும் வழிபட்டனர். இதையும் படியுங்கள்: வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியசாமிக்கு வசந்த உற்சவம்: சப்பரத்தில் வீதிஉலா காவிரியாற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் பக்தர்கள் அம்மா மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த தொட்டிகளில் நிரப்பப்பட்ட தண்ணீரில் புனித நீராடினர். மற்றொரு புறம் தடுப்புக்கட்டைகள் கட்டி அதில் நீராடி அனுமதிக்கப்பட்டனர். தர்ப்பணம் கொடுத்தவர்கள் அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு விளக்கேற்றினர். மேலும் பசு மாட்டிற்கு அகத்திக்கீரையை தானமாக வழங்கினர். இதேபோல் திருச்சி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை, தில்லைநாயகம் படித்துறை, முக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆடி அமாவாசை தினத்தையொட்டி திரளான பக்தர்கள் முன்னோர்களின் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். தொடர்ந்து அவர்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர். பின்னர் வீடுகளில் விரதம் இருந்து, காகங்களுக்கு உணவிட்டு தாங்களும் சாப்பிட்டனர்.