மணப்பாறையில் அதிமுக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி, செப். 13 மணப்பாறை நகராட்சியில் அதிமுக கவுன்சிலர்களின் வார்டுகள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு. ஆணையரைக் கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் அலுவலக வாயிலில் திடீர் ஆர்ப்பாட்டம்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இந்நிலையில் இன்று நகர்மன்றக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அதிமுக கவுன்சிலர் ராமன், அதிமுக உற்ப்பினர்களின் வார்டுகள் புறக்கணிக்கப்படுவதாக புகார் கூறினார். தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்ற நிலையில் கொசுமருந்து தெளிப்பான் மற்றும் மருந்து வாங்கியது, திடக்கழிவு சேகரம் செய்யும் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி, சந்தையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடைகள் குறித்து தெளிவான விளக்கம் அளிக்கும் வரை கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் எனக்கூறி அதிமுக உறுப்பினர்கள் 11 பேரும் ஆட்சேபனை கடிதத்தை நகர் மன்ற தலைவர் கீதாமைக்கேல்ராஜிடம் கொடுத்து விட்டு வெளிநடப்பு செய்தனர். இதனைத்தொடர்ந்து நகராட்சி அலுவலக வாயில் முன்பு வந்த அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து நகர் மன்ற கூட்டத்தையும் அதிமுக உறுப்பினர்களின் வார்டுகளையும் புறக்கணித்து வரும் நகராட்சி ஆணையரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆணையரைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
அதிமுக கவுன்சிலர்களின் வார்டுகளில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் செய்யாமல் வேண்டுமென்றே புறக்கணித்து வருவதாகவும், அடிப்படை வசதிகளைக் கூட நிறைவேற்றுவதில்லை எனவும் குற்றஞ்சாட்டினார். அதிமுக கவுன்சிலர்களின் திடீர் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.