ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து வெளியே வந்த பணத்தை கைப்பற்றிய போலீசார்
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் பணம் எடுப்பதற்காக அதேபகுதியில் உள்ள எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.மில் நேற்று இரவு உள்ளே சென்றுள்ளார். அப்போது அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் வெளியை ரூபாய் நோட்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து அந்த பகுதியில் போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் இருந்த பாலக்கரை போக்குவரத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரான்சோ மற்றும் ஏட்டு முருகன் ஆகியோரிடம் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து அவர்கள் ஏ.டி.எம்.மில் இருந்த ரூ.10 ஆயிரத்தை எடுத்து காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீசார் கமிஷனர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இந்த பணம் யாருடையது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.