சரக்கு ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் சரக்கு ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் பலியானார்.
முசிறி தாலுகா அய்யம்பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் அண்ணாவி.இவரது மகன் 34 வயதான மதிவாணன். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து திருச்சியில் உள்ள தனியார் பால் கம்பெனிக்கு லோடு ஏற்றும் பணிகளை செய்து வந்தார்.
இந்நிலையில் பால் லோடு ஏற்றுவதற்காக அய்யம்பாளையத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மேட்டுப்பாளையம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. தனியார் பேருந்தை முசிறி தாலுக்கா எம். புதுப்பட்டியைச் சேர்ந்த அய்யாசாமி மகன் 45 வயதான ராஜா ஓட்டிச் சென்றார். இந்நிலையில் திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் உள்ள கோட்டூர் பகுதியில் சென்ற போது சரக்கு ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த அட்டோ டிரைவர் மதிவாணன் சேதம் அடைந்த ஆட்டோவின் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டார். இதனை தொடர்ந்து சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் அவரை் மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த வாத்தலை போலீசார் பேருந்து ஓட்டுனர் ராஜாவிடம் விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.