புளியஞ்சோலையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
திருச்சி, மே 21 திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சுற்றுலாத்தலமான புளியஞ்சோலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை.
திருச்சி மாவட்டம் துறையூரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சுற்றுலாத்தலமான புளியஞ்சோலை. இந்த புளியஞ்சோலையில் வருடம் முழுவதும் தண்ணீர் நீரோடையில் ஓடிக் கொண்டிருக்கும். தற்போது புளியஞ்சோலை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் தண்ணீர் சற்று குறைவாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் தண்ணீர் செல்லும் பாதையில் உள்ள பாறைகள் மற்றும் கற்களை அகற்றும் பராமரிப்பு பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
எனவே பராமரிப்பு பணிகளுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் சுற்றுலா பயணிகளுக்கு புளியஞ்சோலை பகுதியில் வனத்துறையினர் தற்போது தடை விதித்துள்ளனர்.
பராமரிப்பு பணிகள் இன்னும் ஒரு வார காலம் நடைபெறும் என்பதால் அதன் பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.