திருச்சியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு நேற்று இரவு திருச்சி-புதுக்கோட்டை சாலையில் அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. அதேநேரத்தில் புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டு இருந்தது. திருவளர்ச்சிப்பட்டி அருகே சென்றபோது, பஸ்சும்-லாரியும் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதியது. இதில் லாரி டிரைவரின் கால் உடைந்தது. பஸ் பயணிகள் 9 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்தை கண்ட அந்த பகுதியினர் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சி-புதுக்கோட்டை சாலையில் சாலை போடும் பணியால் ஒருபுறம் போக்குவரத்தை நிறுத்தி எதிர்எதிர் திசையில் சென்ற வாகனங்களை ஒரேபாதையில் செல்ல அனுமதித்ததால் விபத்து நடைபெற்று இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.