திருநங்கைக்கு காவலர் தொல்லை: மத்திய சிறை டி.ஐ.ஜி, கண்காணிப்பாளர் பணியிட மாற்றம்
திருச்சி, ஜூலை 18 திருச்சி மத்திய சிறை டி.ஐ.ஜி. காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அரியமங்கலம் காவல் நிலையப் பகுதியில் நடந்த திருட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டு திருச்சியைச் சேர்ந்த சாரங்கன் (32) மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த தலைமைக் காவலர் மாரீஸ்வரன் திருநங்கை சாரங்கனை தகாத உறவுக்கு அழைத்து தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்தது.
இதுகுறித்து திருநங்கை சாரங்கன் திருச்சி மத்திய சிறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி, கண்காணிப்பாளர் ஆண்டாள் உள்ளிட்டோரிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.. இதையடுத்து திருநங்கை சாரங்கன் திருச்சி மாவட்ட நீதிமன்றத்திலுள்ள சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் சட்டப்பணிகள் ஆணைய குழுவால் நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் சிறை வளாகத்தில் விசாரணை மேற்கொண்டார்.
அப்போது அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, தலைமைக் காவலர் மாரீஸ்வரன் சாரங்கன் அடைக்கப்பட்டிருந்த பகுதிக்கு சென்று வந்தது உறுதியானது. இதையடுத்து சாரங்கன் புகார் குறித்து முறையான நடவடிக்கை எடுக்காத திருச்சி மத்திய சிறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி, சிறைக் கண்காணிப்பாளர் ஆண்டாள் தலைமைக் காவலர் மாரீஸ்வரன் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, சிறைத் துறை ஏ.டி.ஜி.பி மகேஷ்வர் தயாள் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இரு நாள்களுக்கு முன் டி.ஐ.ஜி.ஜெயபாரதி, வேலூர் காவலர் பயிற்சிப் பள்ளிக்கும், மத்திய சிறைக்கண்காணிப்பாளர் ஆண்டாள் திருச்சி காவலர் பயிற்சிப் பள்ளிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.