பறவைகள் பூங்கா அமைக்கும் பணி : மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி, மே 8 நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 13. 70 கோடி மதிப்பீட்டில் பொதுமக்கள் பங்களிப்புடன் திருச்சி மாவட்டம், கம்பரசம்பேட்டை ஊராட்சியில் 1. 63 ஹெக்டேர் பரப்பளவில் பறவைகள் பூங்கா அமைத்திட திட்டமிடப்பட்டு, இதற்கான பணிகள் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி வைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பூங்காவில் இயற்கையான சூழ்நிலையில் அரிய வகை மற்றும் வெளிநாட்டு பறவைகள், வீட்டு விலங்குகள் வளர்க்கப்பட உள்ளது. இவ்வினங்களை வளர்த்தல் மற்றும் பாதுகாத்தலுடன் கூடுதலாக பறவைகள் இன பெருக்கத்திற்கென தனி அமைப்பும் ஏற்படுத்தப்பட உள்ளது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை ஆகிய பண்டை தமிழர்களின் ஐந்திணை வாழ்வியலை பிரதிபலிக்கும் விதமாக அமைவிடங்களும், புல்வெளிகள், சிற்பங்கள், நீருற்றுகள், இடை நிறுத்தப்பட்ட பாலங்கள், வரைபடங்கள் என பல அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த பூங்கா திட்டமிடப்பட்டுள்ளது.
முதியோர் மற்றும் பொதுமக்கள் இளைப்பாறும் வகையில் நிழல் அமைவிடங்கள் மட்டுமல்லாது ஒரு 7 திரையரங்கு, மகளிர் சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனை அங்காடி மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.
இப்பூங்காவில் மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் நடைபெற்ற வரும் பணிகளை ஆய்வு செய்து விரைவாக பணிகளை முடிப்பதற்கு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.