8 பேர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை
திருச்சியில் 8 பேரை கொன்று புதைத்த
சீரியல் கொலையாளி சப்பானிக்கு இருவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் கிராமத்தை சேர்ந்த தங்கதுரை என்பவர் 2016 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டதில் அவருடைய நண்பரான சப்பானி என்பவர் கைது செய்யப்பட்டார். சப்பானியிடம் நடத்தப்பட்ட போலீஸ் விசாரணையில் அவர் நகைக்காக வெவ்வேறு காலகட்டங்களில் 2012 ஆம் ஆண்டு முதல் அவரது தந்தை தேக்கன் (75), கோகிலா (70), அற்புதசாமி (70), விஜய் விக்டர் (27), சத்தியநாதன் (45), பெரியசாமி (75), குமரேசன் (50), தங்கதுரை (35) ஆகிய
எட்டு பேரை கொலை செய்தது தெரிய வந்தது. அதனையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நகைக்காக அவர்கள் அனைவரையும் கொலை செய்ததையும் கொலை செய்யப்பட்டவர்களோடு நெருங்கி பழகி பூஜை செய்வதற்காக அழைத்து சென்று அவர்களை கொலை செய்ததாக சப்பாணி வாக்குமூலம் அளித்தார். இது தொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் தங்கத்துரை, சத்யநாதன் ஆகிய இருவர் கொலை வழக்கு தொடர்பாக இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. வழக்கு விசாரணை அடிப்படையில் அவர்கள் இருவரையும் கொலை செய்தது சப்பாணி தான் என திருச்சி முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி பாபு தீர்ப்பில் கூறினார். சப்பாணி மீது பதியப்பட்ட நான்கு வழக்கு பிரிவுகளில் இரு பிரிவுகளுக்கு 10 ஆண்டுகளும், 201 பிரிவுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும், 302 பிரிவுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். அனைத்து தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி பாபு தன் தீர்ப்பில் தெரிவித்தார். தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் சப்பாணி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.