புத்தாண்டையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
திருச்சி, ஜன.1 ஆங்கில புத்தாண்டை யொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில்.
இக்கோவிலுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை யொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை 5.30 மணியிலிருந்தே கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் குழந்தைகளை கரும்புத் தொட்டிலில் சுமந்தும், மொட்டை அடித்தும், மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
மேலும் ராஜகோபுரத்தின் முன்பும் தீபம் ஏற்றும் இடத்திலும் பெண்கள் தீபம் ஏற்றி அம்மனை வணங்கினர். தொடர்ந்து நீண்ட வரிசையில் நின்று உற்சவர் அம்மனை தரிசனம் செய்தனர்.
வழக்கத்தைவிட அதிகளவில் பக்தர்கள் வந்ததால், கூட்டத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் கோவில் பணியாளர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர். மேலும் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சமயபுரம் போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டனர்.