பிணி தீர்க்கும் பிராணாயாமம் சிறப்பு சொற்பொழிவு
திருச்சிராப்பள்ளி தமிழ் சங்கத்தில் பிணி தீர்க்கும் பிராணாயாமம் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது தமிழ்ச்சங்க அமைச்சர் (பொறுப்பு) பெ.உதயகுமார் வரவேற்றார். துணை அமைச்சர் இராசு. நாச்சிமுத்து முன்னிலை வகித்தார். அமிர்தா யோக மந்திரம் யோகா ஆசிரியர் பெ.விஜயகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில்,
மனித குலம் ஆரோக்கியமாகவும், அன்பாகவும், அமைதியாகவும் இருக்க நமது முன்னோர்கள் வழிவகை செய்துள்ளார்கள். அவ்வழியில் பதஞ்சலி யோக சூத்திரத்தில் அனைவரும் பின்பற்றும் வகையில் அஷ்டாங்க யோகம் அமைந்துள்ளது. சாதி, மத, இன வேறுபாடு இன்றி அனைவரும் பயிலலாம். இதனால் தனிமனித ஒழுக்கம், உடல், உள ஆரோக்கியம் மேம்படும். அஷ்டாங்க யோகத்தில் இயமம், நியமம், ஆசனம், பிராணயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி என எட்டு படிநிலைகள் உள்ளன. பிராணன் உடல் இயக்கத்திற்கும் உள செயல்பாடுகளுக்கும் ஆதாரமாய் உள்ளது. பிராணயாம பயிற்சியினால் சுவாச இயக்கம் சீராகவும், ஆழமாகவும், நிதானமாகவும் அமையும். மனித உடலை இயக்கும் நிலைக்கு ஏற்ப பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன், நாகன், கூர்மன், க்ருகரன், தேவதத்தன், தனஞ்சயன் பிராண வாயுக்கள் செயல்படுகிறது . ஒருவர் முறையாக சுவாச பயிற்சி மேற்கொண்டால் அப்பயிற்சியானது பிணி தீர்க்கும் பிராணயாமமாக அமையும் என்றார். நிறைவாக அரங்க. கணேசன் நன்றி கூறினார்.