மண்ணச்சநல்லூர் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் நேரடி கள ஆய்வு
திருச்சி, ஜூலை 22 மண்ணச்சநல்லூர் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் நேரடி கள ஆய்வு.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டாரம் வேளாண்மைத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் 2026-27′ ஆம் ஆண்டிற்கான குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டப் பணிகளை 21.07.2026 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு செய்தார்.
குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம்:
இத்திட்டத்தின் கீழ் மண்ணச்சநல்லூர் வட்டாரத்திற்கு 100 ஏக்கர் சாகுபடி இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை இயந்திர நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு மூலம் 60 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இயந்திர நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 4000 வீதம் பின்னேற்பு மானியம் வழங்கப்பட உள்ளது.மேலும்,10 வருடங்களுக்கு மேற்பட்ட நெல் ரக விதைகளுக்கு கிலோவிற்கு ரூ. 10 வீதம் மானியமும், உயிர் உரங்கள் மற்றும் நெல் நுண்ணூட்டக் கலவை ஆகியவை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
வயல்வெளி ஆய்வுகள்:
மாவட்ட ஆட்சியர் தனது ஆய்வின் போது, பிச்சாண்டர் கோவில் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி கண்ணன் என்பவரது 5.5 ஏக்கர் பரப்பளவில் நேரடி நெல் விதைப்பு செய்த வயலை பார்வையிட்டு நேரடி நெல் விதைப்பு முறை மற்றும் அதன் பயன்கள் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து, திருவாசி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திருமதி. பிரேமா என்பவரது 6 ஏக்கர் பரப்பளவிலான வயலில் இயந்திர நடவு செய்த நெல் நடவுப் பணிகளையும் நேரில் பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
வேளாண் விரிவாக்க மையத்தில் ஆய்வு:
வயல்வெளி ஆய்வுகளைத் தொடர்ந்து, மண்ணச்சநல்லூர் வேளாண்மை விரிவாக்க மையம் அலுவலகம் மற்றும் கிடங்குகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும், விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட கலவைகள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் ஆகிய இடுப்பொருட்கள் இருப்பு மற்றும் விநியோகம் குறித்து விரிவாக கேட்டறிந்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த நேரடி ஆய்வின் போது, வேளாண்மை இணை இயக்குநர் திருமதி.சாந்தாமணி , வேளாண்மைத் துணை இயக்குநர் (மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் – வேளாண்மை) திருமதி. ஜெயராணி, , மண்ணச்சநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி. செல்வராணி, வேளாண்மை அலுவலர் கலைச்செல்வி, ரோகித், துணை வேளாண்மை அலுவலர் ஜான் ஜெயக்குமார் மற்றும் வேளாண்மை உதவி அலுவலர்கள் பார்த்திபன், கதிரேசன், ஆனந்து கிடங்கு கண்காணிப்பாளர் தேன்விமின் மற்றும் விற்பனை உதவியாளர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.