கார்மெல்ஸ் குழுமப் பள்ளிகளில் சுற்றுச்சூழல் கருத்தரங்கம்
கார்மெல்ஸ் குழுமப் பள்ளிகளில் தண்ணீர் சிறார் சுற்றுச்சூழல் மன்றம் சார்பாக சுற்றுச்சூழல் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் அமிர்தம் டிரஸ்டின் நிர்வாகத் தலைவருமான திரு.விஜயகுமார், அவர்கள் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். பள்ளியின் தாளாளர் திருமதி.பாக்கியஜோதி தேவதாஸ், முதல்வர் திரு.மனோவா பிரேம் குமார், மற்றும் கல்வி ஒருங்கிணைப்பாளர் திருமதி.ஜோஸ்ஃபின் பெர்ஸி வெஸ்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக சிறப்பு அழைப்பாளர் திரு.விஜயகுமார் அவர்கள், மாணவர்களிடையே நெகிழி பயன்பாட்டினால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் மற்றும் மாசு, அதனால் மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை பற்றி எடுத்துரைத்தார். திருச்சியில் இயற்கை சூழலுடன், பல வகை மரங்கள் மற்றும் செடிகொடிகள் கொண்ட பரந்து விரிந்த மைதானமும் கொண்ட பள்ளியாக கார்மெல்ஸ் விளங்குவது பார்ப்பதற்கு மனநிறைவாக இருப்பதாகவும், இங்கே படிக்கும் மாணவர்கள் பள்ளிப்படிப்புடன் சேர்த்து சூழல் அறிவையும் வளர்த்துக்கொள்வதால் நாளைய சமுதாயத்தின் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை களைந்தெடுத்து அவற்றில் இருந்து நம்மை மீட்டெடுக்கும் ஞானத்துடனும் பொறுப்புடனும் இருப்பார்கள் என்று வாழ்த்தினார்.
மேலும் கார்மெல்ஸ் பள்ளி மாணவர்களை உய்யகொண்டான் ஆற்றங்கரையில் பனை நடும் விழாவினை முன்னெடுக்குமாறும், அதற்கான அனைத்து உதவிகளை தானே செய்வதாகவும் உறுதியளித்தார். பனை மரங்களை நீர் நிலைகளின் கரைகளில் நடுவதன் மூலம் நமக்கும் சூழலுக்கும் ஏற்படும் நன்மைகளையும் மாணவர்களுக்கு சிறப்பாக எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வை கார்மெல்ஸ் பள்ளியின் தண்ணீர் சிறார் சுற்றுச்சூழல் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் திருமதி. தீபா, செல்வி.கவிதா, மற்றும் குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் திருமதி.ராஜதிலகம், செல்வி.அன்பரசி, செல்வி.ஜெனிட்டா, திரு.வல்லரசு ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.