மாடுகள் ஏற்றிச் சென்ற லாரியில் தீ விபத்து
திருச்சி, ஜூன் 4 மணப்பாறை அருகே மாடுகள் ஏற்றிச் சென்ற லாரியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 3 மாடுகள், ஒரு கன்றுக்குட்டி காயமடைந்தன.
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் இருந்து 20 மாடுகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று மணப்பாறை மாட்டுச் சந்தைக்கு சென்று கொண்டிருந்தது. திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வையம்பட்டி அருகே சக்கம்பட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது லாரியின் பின்பகுதியில் மாடுகளை நிறுத்துவதற்காக கொட்டப்பட்டிருந்த தேங்காய் நாரில் தீப்பற்றி எரியவே உடனே லாரியை நிறுத்தி அருகில் உள்ளவர்களின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். உடனே சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை விரைந்து அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் 3 மாடுகள் ஒரு கன்றுக்குட்டி காயமடைந்ததை அடுத்து நடுப்பட்டி கால்நடை மருத்துவமனையில் மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.