சமய விழாக்களின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த அறிவுறுத்தல் கூட்டம்
முசிறி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமய விழாக்களின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த அறிவுறுத்தல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முசிறி தாசில்தார் சந்திர தேவநாதன் தலைமை தாங்கினார். முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு அருள்மணி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் சமய விழாக்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை கடைபிடிப்பதை உறுதி செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. தற்போது கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு சமய விழாக்களை முன்னிட்டு மத சார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் உரியடி, உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்துவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை வைத்து கொண்டாடுவதற்கும், அதேபோல் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும், நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லாத நிலையில் இந்து சமய விழாக்களை பொதுமக்கள் தங்களது இல்லங்களிலேயே கொண்டாடுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனிநபராக சென்று அருகில் உள்ள நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
அமைப்புகள் ரீதியாக கூட்டம் சேர்த்து வழிபாடு நடத்துவதற்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட இந்து முன்னணி நிர்வாகிகள் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் என தெரிவித்தனர். இதுகுறித்து வருவாய்த் துறையினர் உயர் அலுவலர்களிடம் ஆலோசனை நடத்திட முடிவு செய்துள்ளனர்.