திருச்சியில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு உண்ணா விரத போராட்டம்
திருச்சி மார்ச்24 கடந்த 1.4.2003க்குப் பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டத்தினைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத்திட்டத்தினை நடைமுறைப்படுத்திட வேண்டும்.
காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிடவேண்டும்.
முதுநிலை, இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், உடற்கல்வி இயக்குனர் ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதியை களையப்படவேண்டும். தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண் 243 நாள் 21.12.2023 ஐ உடனடியதக ரத்து செய்திட வேண்டும்.
முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், கண்காணிப்பாளர், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் களப்பணியாளர்கள் பல்வேறு துறையில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினை களையவேண்டும். கல்லூரி ஆசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணி மேம்பாடு ஊக்க ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும். உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த
வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கள்வாடி, வருவாய் கிராம உதவியாளர்,ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப்பணியாளர்கள், தொகுப்பூதியம், தினக்கூலியில் பணியாற்றிவரும் எம்ஆர்பி செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்டகாலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். மேலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவேண்டும்
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கும் மேலாக காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்
21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகை அரசு ஊழியர், ஆசிரியர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை வழங்க வேண்டும்.
2003 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும்.
சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிவரன்முறைப்படுத்தவேண்டும்.
என்ற 10 அம்ச கோரிக்கையில் வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நீலகண்டன், நாகராஜன், குமாரவேல், முனைவர் பால்பாண்டி, நவநீதன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உதுமான் அலி வரவேற்றார். போராட்டத்தை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் சண்முகநாதன், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில தலைவர் டேவிட் லிவிங்ஸ்டன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க பொது செயலாளர் பிரகலதா நிறைவுறை ஆற்றினார். முடிவில் மாவட்ட நிதி காப்பாளர் ஆரோக்கியராஜ் நன்றி கூறினார்.