திருச்சியில் துரை வைகோவை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம்
திருச்சி, ஏப். 3 திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், திருச்சி சிறீரங்கத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில்,
இந்தியாவில் எந்த இடத்தில் மத கலவரம் நடந்தாலும் தமிழ்நாட்டில் மிகக்குறைவு. அதுவும் திருச்சியில் இல்லை என்று சொன்னால் மிகை ஆகாது. நல்ல அரசு, நல்ல தலைமையின் அடையாளம் அது. அது தொடர வேண்டும் என்பதற்காக இங்கே வந்திருக்கிறேன். நான் மதிக்கும் மிக முக்கியமான புத்தகம் ‘இந்திய அரசியலமைப்புச் சட்டம்’ அந்த புத்தகம் பாதுகாக்கப்பட்டால் தான் நீங்கள் வணங்கும் மற்ற புத்தகங்கள் எல்லாம் பாதுகாக்கப்படும். எந்த புத்தகமாக இருந்தாலும் சரி. நான் மதம் சார்ந்த புத்தகங்களைப் பற்றி சொல்லவில்லை. அதை எழுதக்கூடாது, இதை படிக்கக்கூடாது என்று சொல்லும் பன்முகத்தன்மை, விரிந்த நோக்கம் இல்லாத எந்த அரசும் ஆபத்தானது. அவை குடியுரிமைச் சட்டங்கள் மற்றும் அரசியல் சட்டங்களின் மீது கை வைக்க தொடங்கும். அதைப்பற்றி விமர்சிக்க வேண்டியது என் கடமை. அய்ந்தாண்டுக்கு ஒரு முறை அந்த கடமையை நீங்கள் செய்து கொண்டே இருந்தால்தான் நாடு நலமாக இருக்கும். நான் இங்கு சீட்டுக்காக வரவில்லை நாட்டுக்காக வந்திருக்கிறேன் என்று கூறினார்.