கொண்டைமாலை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மொண்டிப்பட்டியில் கொண்டைமாலை அம்மன் கோவில் பெரியகுளத்தின் கரையில் அமைந்துள்ளது. நூறாண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோவிலில் விநாயகர், கருப்பசாமி, மதுரைவீரன், ஏழு கன்னிமார் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன. இக்கோவிலில் கடந்த ஓராண்டுக்கு முன்பு புனரமைப்பு பணிகள் துவங்கி நடைபெற்று முடிந்த நிலையில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக நேற்று காலை விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தனபூஜையும் நடைபெற்றது. மாலை கும்ப அலங்காரத்துடன் முற்கால யாகபூஜையும் நடந்தது.
இன்று காலை இரண்டாம் கால யாகபூஜையுடன் துவங்கி மஹா பூர்ணாகுதி தீபாரதனையும் யாத்ராதானத்துடன் கடம் புறப்பாடும் நடைபெற்றது. அதன்பின் மங்கல வாத்தியங்கள் முழங்க வேத மந்திரங்கள் ஒலிக்க விமானம் மற்றும் முலவருக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று தீபாரதனை காட்டப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது.
மொண்டிப்பட்டி ஊர் நாட்டாண்மை நாகராஜன் தலைமையில் நடைபெற்ற விழாவில் டாக்டர் கலையரசன், ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி, மொண்டிப்பட்டி குழந்தைவேல், பழனிச்சாமி, போடுவார் பட்டி நாட்டாண்மை பழனியாண்டி, ஊர் முக்கியஸ்தர்கள் பூங்குடிப்பட்டி மணிகண்டன், நரியம்பட்டி சுந்தரம், மாலைப்பட்டி வெள்ளைச்சாமி, ஆவின் இளங்கோ, ராஜேந்திரன் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.