வெடிகளைக் குறைப்போம் செடிகளை வளர்ப்போம்” விழிப்புணர்வு நிகழ்வு
தண்ணீர் அமைப்பின் சார்பில் “வெடிகளைக் குறைப்போம் செடிகளை வளர்ப்போம்” விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
இடைமலைப்பட்டி புதூர் மாநகராட்சி தொடக்கப்பள் ளியில் பாதுகாப்பான தீபாவளி பசுமையான தீபாவளி” என்ற தலைப்பில் அமைப்பின் செயலாளர் கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் கி.சதீஷ் குமார் சிறப்புரையாற்றினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.புஷ்பலதா தலைமை வகித்தார். தண்ணீர் அமைப்பின் இணைச் செயலர் திரு.R.K. ராஜா முன்னிலை வகித்தார். நிகழ்வில் வெடிகளை வெடிப்பதால் ஏற்படும் சூழல் மாசு, நச்சுத் தன்மை, அதனால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பு, கண் எரிச்சல், தோல் அழற்சி, செவித்திறன் கேட்கும் தன்மை இழத்தல் மற்றும் பல்வேறு உடல் உறுப்பு பாதிப்புகள் குறித்து சிறார்களிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

குறிப்பாக சரவெடிகளை வயதான முதியோர்கள், குழந்தைகள் கர்ப்பிணிகள், சிறார்கள் உள்ள பகுதிகளில் வெடிப்பதை கட்டாயம் தவிர்த்தல் வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது. மேலும் பட்டாசு வெடிக்கும் போது கையுறைகள் அணிந்து பாதுகாப்பான முறையில் கண்ணில் படாதவாறு கவனமுடன் கையாள வேண்டும், பிறகு கைகளை நன்றாக கழுவியப்பின் சாப்பிட வேண்டும் கந்தகத்துகள்கள் உணவில், நீரில் காற்றில் கலந்தால் சிற்றுயிர்கள் தொடங்கி பேருயிர்கள், பறவைகள், வளர்ப்புப் பிராணிகள், கால்நடைகள் வரை பெரும் பாதிப்புக்குள்ளாகி துன்புறும். எனவே வெடிகளைத் தவிர்த்து செடிகளை வளர்ப்போம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிறைவாக சிறார்கள் இணைந்து உறுதி மொழி ஏற்கப்பட்டது. கொய்யா, நாவல் மரக்கன்றுகள் பெற்றுக் கொண்டு மாணவர்கள் பசுமையான தீபாவளி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.