நாய்கள் கடித்து குதறியதில் சிறுமி படுகாயம்
திருச்சி, டிச. 2 திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வீ.பூசாரிபட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான வடிவேல் என்பவரின் மகள் 4 வயது சிறுமி தன்னுடைய வீட்டிற்கு முன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் சுற்றித் திரிந்த நாய்கள் சிறுமியை கடித்துக் குதறவே சிறுமி அலறி துடித்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்ட பொதுமக்கள் விரைந்து வந்து நாய்கள் துரத்திவிட்டு சிறுமியை மீட்டு பார்த்தபோது வலது மார்பில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக சிறுமியை மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றித் திரிவதும் பொதுமக்களையும் கோழி மற்றும் கால்நடைகளையும் கடித்து மக்கள் பாதிக்கப்படும் சம்பவமும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றது. சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களை இனியும் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால் இதே போல் சம்பவத்தில் பலரும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்பதை உணர்ந்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.