தோட்டக்கலை பயிரான மிளகாயை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!
திருச்சி தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருச்சி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிரான மிளகாய் மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, உப்பிலியபுரம், புள்ளம்பாடி போன்ற வட்டாரங்களில் பயிரிடப்பட்டு வருகிறது. மிளகாய் பயிரை பொருத்தவரை வளரும் பருவம், பூக்கும் பருவம், காய்க்கும் பருவம் என 3 பருவத்திலும் பலவிதமான பூச்சிகள் தாக்குகின்றன. தற்போது மிளகாய் பயிர் சாகுபடியில் இலைப்பேன் பூச்சி தாக்குதல் அதிகளவில் காணப்படுகிறது. இந்த இலைப் பேனானது இலையில் உள்ள சாற்றை உறிஞ்சும் தன்மை கொண்டது. இதனால் இலை மஞ்சள் நிறமாக மாறி பூக்கள் மற்றும் காய்கள் உதிர்ந்து மகசூல் இழப்பு ஏற்படுகின்றது.
இந்த பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கு மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி பேராசிரியர் பரிந்துரையின்படி இமிடா குளோபிரிட் 70 WS (அ) தியோமெத்தோக்ஸம் 30 FS ஒரு கிலோ விதைக்கு 12 கிராம் என்ற விகிதத்தில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். 10 லிட்டர் தண்ணீரில் இமிடா குளோபிரிட் 17.8 SL 3 மி.லி (அ) டைமெத்தோயேட் 30 EC 10 மி.லி (அ) பிப்ரோனில் 5 சதவீதம் SG 15 மி.லி (அ) ஸ்பினோசாட் 45 சதவீதம் SG 3.2 மி.லி (அ) அசிட்டாமிப்பிரிட் 20 SP 2 கிராம் என்ற விகிதத்தில் மருந்தை கலந்து தெளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.