புதிய கட்டிடத்திற்கு அமைச்சர் அன்பில்மகேஸ் அடிக்கல் நாட்டினார்
திருச்சி, டிச. 11 திருச்சி மாவட்டம். திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலத்தூரில் அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. பழுதடைந்த கட்டிடம் என்பதால் அந்த கட்டிடம் இடிக்கப்பட்டது, தொடர்ந்து அதில் பயின்ற மாணவ மாணவிகளுக்கு அருகில் உள்ள நூலகத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தரக் கோரி அப்பகுதி மக்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இடம் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் அப்பகுதியை ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 31 லட்சத்து 56ஆயிரம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தார்.
அதற்கான கட்டுமான பணிகளை துவங்கி வைப்பதற்காக இன்று பூமி பூஜை நடைபெற்றது. இந்த பூமி பூஜையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு மாணவ மாணவிகளுடன் அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மண்டலம் மூன்றின் தலைவர்மு.மதிவாணன் மாமன்ற உறுப்பினர் நீலமேகம், சிவக்குமார் அரசு உயர் அதிகாரிகள் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவர்கள் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்