ரூ.100 கோடியில் நகர்ப்புற வேலை வாய்ப்புத்திட்டம் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தகவல்!
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மாநகராட்சி, கோ.அபிஷேகபுரம் கோட்டம் 8வது வார்டு குழுமணி சாலைப்பகுதியில், மாவட்ட ஆட்சித்தலைவர் .சு.சிவராசு தலைமையில், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், முசிறி சட்டமன்ற உறுப்பினர் ந.தியாகராஜன் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தினை மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்து வேலை செய்பவர்களுக்கு வேலைக்கான அடையாள அட்டையினை இன்று வழங்கிப் பேசினார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் பேசும் போது தெரிவித்ததாவது:- நகர்ப்புற ஏழைகளின்
வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் டாக்டர்.சி. ரங்கராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு பரிந்துரையின் அடிப்படையில், நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தை முன்னோடித் திட்டமாக தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ரூ.100 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம் என்ற திட்டம் பெருநகர சென்னை மாநகராட்சியில் இரண்டு மண்டலங்களிலும், ஏனைய மாநகராட்சிகளில் தலா ஒரு மண்டலமும், 7 நகராட்சி நிர்வாக மண்டலங்களில் தலா ஒரு நகராட்சி என 7 நகராட்சிகள், 37 மாவட்டங்களில் தலா ஒரு பேரூராட்சி வீதம் 37 பேரூராட்சிகளிலும் இத்திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, திருச்சி மாநகராட்சியில் உள்ள கோ.அபிஷேகபுரம் கோட்டத்தில்,
இத்திட்டத்தின் கீழ் இப்பகுதிவாழ் 67,762 குடியிருப்புகளில், 62,300 குடியிருப்புகளை ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான 5,630 நபர்கள் விருப்பம் தெரிவித்ததன் அடிப்படையில் 5,630 வேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பெண்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 50 சதவீதம் குறையாமல் பெண் பணியாளர்களை அமர்த்தி இருபாலருக்கும் சம அளவில் ஊதியம் நிர்ணயம் செய்யப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வார்டு பகுதிகளிலும் உள்ள பங்குதாரர்கள் அடங்கிய குழுவினை
தேர்வு செய்து, அந்த குழுக்கள் பரிந்துரைக்கும் பணிகளை மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி, சாலையோரத்தில் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைத்தல், மாநகராட்சி பூங்காக்கள் பராமரிப்பு. சாலையோரம் உள்ள முட்புதர்கள், களைகளை அகற்றி வடிகால் அமைத்தல், நுண் உர செயலாக்க மையங்களை இயக்கி பராமரித்தல்,
சாலையோரம் மரம் நடுதல், கோவில் குளம் தூர்வாருதல், ஏற்கனவே உள்ள வடிகால்களில் ஏற்பட்டுள்ள பழுதுகளை மராமத்து செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள 2021-22ம் ஆண்டிற்கு ரூ.142.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ரூ.363 வீதம் வழங்கும் வகையில் மனித ஆற்றலுக்கு ரூ.88.39 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான், மாவட்டப் பிரமுகர் வைரமணி, மாமன்ற உறுப்பினர் என்.பங்கஜம் மதிவாணன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.