மண்ணச்சநல்லூர் அருகே பதுக்கி வைக்கபட்டிருந்த 70க்கு மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்
திருச்சி, மார்ச் 31 திருச்சி அருகே டாஸ்மாக் விடுமுறை எதிரொலி கள்ள சந்தையில் அதிக விலைக்கு மதுபாணம் விற்பனை – இரண்டு சாக்குப் பையில் 70க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த கருங்காடு பகுதியில் உள்ள அரசு மதுபான கடை எதிரே உள்ள மாமர தோப்பில் சட்ட விரோதமாக தமிழக மதுபான பாட்டில்கள் மற்றும் வெளி மாநில மதுபான பாட்டில்கள் சாக்குப் பையில் மறைத்து வைத்து விற்பனை செய்வதாக நேற்று இரவு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் தாசில்தார் சேக்கிழார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் என்பவரது மனைவி அஞ்சலைக்கு சொந்தமான மாந்தோப்பில் இரண்டு சாக்கு பைகளில் மறைத்து வைத்து இருந்தது கண்டறியப்பட்டது உடனடியாக 76 மது பாட்டில்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
இதில் தமிழக அரசு மதுபானம் 43 குவாட்டர் பாட்டில்கள் மற்றும் வெளி மாநில மதுபானங்கள் 32 கட்டிங் பாட்டில்கள் ஒரு ஃபுல் பாட்டில்கள் இருந்தது.
இதனைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை தேர்தல் பறக்கும் படை அலுவலர் சேக்கிழார் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
மேலும் இது குறித்து தாசில்தார் சேக்கிழார் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மது பாட்டில்களை மறைத்து வைத்திருந்த நபர் யார்? சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மது வகைகளை விற்பனை செய்ய டாஸ்மார்க் நிர்வாகத்தால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் எந்த டாஸ்மார்க் கடையில் இந்த மது பாட்டில்கள் வாங்கப்பட்டன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இன்றைய தினம் மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு மதுபான கடைகள் விடுமுறை என்பதால் அதிக விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்தது என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.