பாலியல் சீண்டல் தொடர்பான பிரச்சனையில் மூடப்பட்ட பள்ளிகள் திறப்பு
திருச்சி, பிப்.11 திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள மணப்பாறைபட்டி சாலையில் இயங்கி வந்த சிபிஎஸ்சி தனியார் பள்ளியில் கடந்த வியாழக்கிழமை 4 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் சீண்டல் கொடுத்த சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 4 பேர் ஜாமீனில் வெளிவந்தனர். பாலியல் சீண்டல் சம்பவத்தில் ஈடுபட்ட பள்ளியின் அறங்காவலர் வசந்தகுமார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சம்பவத்தன்று ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர்கள் இதே நிறுவனத்தின் மற்றொரு மெட்ரிக் பள்ளியை சூறையாடினர். இதனால் இரண்டு பள்ளிகளுக்கு வெள்ளி, சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று பள்ளிகள் இரண்டும் திறக்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்த நிலையில் பள்ளிகள் இரண்டும் திறக்கப்பட்டது. மாணவ – மாணவிகளின் வருகை மிகவும் குறைந்தே காணப்பட்டது.
பள்ளியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. இதற்கிடையில் சிபிஎஸ்இ பள்ளியில் தங்களின் பிள்ளைகைள விட வந்த பெற்றோர் பள்ளியில் இதுபோன்று விருப்பதகாத சம்பவம் நடந்து விட்டது. ஆனால் அதுகுறித்து பள்ளி நிர்வாகத்தின் சார்பில் எந்தவித வருத்தமும் தெரிவிக்கவில்லை, பள்ளி திறக்கப்படும் என்ற குறுஞ்செய்தி மட்டுமே பெற்றோருக்கு அனுப்பி வைத்துள்ளனர். எங்கள் பிள்ளைகளை பள்ளியில் விட்டுச் சென்றபின் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு என்று பள்ளி நிர்வாகத்திடம் கேட்டு காத்திருந்தனர். உடனே அங்கு வந்த தனியார் மெட்ரிக் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் பேபி மற்றும் மணப்பாறை டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி 2 மணிக்கு மாணவ – மாணவிகளின் பெற்றோருக்கு கூட்டம் நடத்தி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து பெற்றோர் தங்களின் பிள்ளைகளை விட்டுச் சென்றனர்.
இதுகுறித்து பெற்றோர் கூறும் போது பள்ளியில் எல்லா இடங்களிலும் கேமரா பொருத்த வேண்டும், பணியாளர் இல்லாத யாரையும் பள்ளிக்குள் அனுமதிக்க கூடாது, ஆசிரியர்களின் விபரங்களை பெற்றோரிடம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.