ஊராட்சி அளவில் புத்தக கண்காட்சி அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்
மணப்பாறை அருகே தமிழகத்தில் முதன் முறையாக ஊராட்சி அளவில் புத்தக கண்காட்சியை துவக்கி வைத்த அமைச்சர் அன்பில். மகேஸ் பொய்யாமொழி.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டி ஊராட்சிமன்ற நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் சூர்யா நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்திய “வையம்”; புத்தக கண்காட்சி மற்றும் வாசிப்பை நேசிப்போம் தொடக்க விழா இன்று நடைபெற்றது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரிப்பன் வெட்டி கண்காட்சியை துவக்கி வைத்தார். அப்போது பேசிய அமைச்சர்,
புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் மட்டுமே நடைபெற்று வந்த புத்தக கண்காட்சியினை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற வேண்டும் என்று முயற்சி எடுத்து கடந்த ஓராண்டில் 38 மாவட்டங்களிலும் புத்தக்கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. ஆனால் முதன்முறையாக ஒரு ஊராட்சி அளவில் இங்கு புத்தககண்காட்சி நடைபெறுவது அனைவரும் பாராட்டும் வகையில் உள்ளது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமறை விடப்பட்டுள்ள நிலையில் அவர்கள் விடுமுறையை பயனுள்ள வகையில் நல்ல விதத்தில் பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் கல்வி அறிவை வளர்த்துக்கொள்ள அடித்தளமாக உள்ள புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்த உணர்வுப்பூர்வமான நல்ல நிகழ்வை ஏற்பாடுசெய்துள்ளனர். திருச்சி மாவட்டம் மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஊராட்சிமன்ற தலைவர்களும் இதுபோன்ற முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும், பெரியவர்களும் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதோடு இப்போதிருந்தே குழந்தைகளுக்கும் அந்த பழக்கத்தை ஏற்படுத்திதரவேண்டும் என அமைச்சர் பேசினார்.

இவ்விழாவிற்கு வையம்பட்டி ஊராட்சி தலைவரும் சூர்யா நினைவு அறக்கட்டளை நிறுவனருமான
வே. சுப்பிரமணியன் தலைமையேற்றார். மாவட்ட செயலாளர் மணிகண்டன் வரவேற்புரையாற்றினார்.
இவ்விழாவில் வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் குணசீலன், திமுக மாவட்ட அவைத்தலைவர் பன்னப்பட்டி கோவிந்தராஜன், வையம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், வையம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் ஸ்ரீரங்கன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு அண்ணாதுரை உள்பட பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நிறைவாக சூர்யா அறக்கட்டளை பொருளாளர் நாகலட்சுமி நன்றியுறை நிகழ்த்தினார்.
வையம்பட்டி ஊராட்சி நிர்வாகம் மற்றும் அறிவியல் இயக்கம் சூர்யா நினைவு அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.