டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி நாம் தமிழர் மருத்துவ பாசறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
திருச்சி, டிச.29 டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி நாம்தமிழர் மருத்துவ பாசறை சார்பில் கோரிக்கை மனு
நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறை மாநில பொருளாளர் கிருஷ்ணசாமி தலைமையிலான நிர்வாகிகள், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
திருச்சி மாநகராட்சி 12 வது வார்டு மேல சிந்தாமணி பகுதியில் அமைந்துள்ள இ.ஆர் மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பல்நோக்கு மருத்துவமனை அருகில் ஒரு டாஸ்மாக் மதுபான கடை நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், முதியோர், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களையும், மன உளைச்சலையும் சந்தித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் திறந்த வெளியில் மது அருந்துதல், குப்பைகள், பாட்டில்கள் போன்றவை வெளியே போடப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. மருத்துவமனை, பள்ளி, கோவில் போன்ற பொதுநல மற்றும் மக்கள் நல இடங்களுக்கு அருகில் மதுபான கடைகள் அமைக்க கூடாது என்ற விதியின் அடிப்படையில், இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றவோ அல்லது முழுமையாக அகற்றவோ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.