திருச்சி மாநகர காவல்அதிகாரிகளுக்கு கைத்துப்பாக்கிகளை கையாளும் பயிற்சி
திருச்சி, ஜூலை 13 திருச்சி மாநகர காவல்துறையினருக்கு கைத்துப்பாக்கிகளை கையாளும் பயிற்சி மாநகர காவல் ஆணையர் காமினி மேற்பார்வையில் நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் & ஒழுங்கு) உத்தரவின்பேரில், திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்பார்வையில், திருச்சி மாநகரில் உள்ள காவல் அதிகாரிகளுக்கு கைத்துப்பாக்கியை கையாளும் பயிற்சி மற்றும் வாராந்திர கவாத்து பயிற்சி திருச்சி கே.கே.நகர் மாநகர ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் திருச்சி மாநகரில் உள்ள சட்டம் ஒழுங்கு காவல்நிலையம், குற்றப்பிரிவு காவல்நிலையம், மாநகர ஆயுதப்படை அதிகாரிகள் என மொத்தம் சுமார் 530 பேர் கலந்து கொண்டனர். இதில் 46 காவல் அதிகாரிகளுக்கு கைத்துப்பாக்கியை எப்படி கையாளுவது, துப்பாக்கிகளின் உதிரி பாகங்களை தனிதனியாக பிரித்தும், மீண்டும் துப்பாக்கிகளை ஒன்றினைத்து, அவற்றை பயன்படுத்தும் முறை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. காவல் ஆளிநர்கள் வாரந்திர கவாத்து மேற்கொண்டனர்.
மேற்கண்ட பயிற்சியில் உதவி ஆணையர்கள், அனைத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்துகொண்டார்கள். மேலும் பயிற்சியின்போது காவல் துணை ஆணையர் வடக்கு, தெற்கு மற்றும் தலைமையிடம், கூடுதல் துணை ஆணையர், (ஆயுதப்படை) ஆகியோர் உடனிருந்தனர்.