காவல்துறையினர் மாமூல் தொல்லையால் பாதிப்பு : ஏஐடியுசி தரைக்கடை, சிறுவியாபாரிகள் சங்கம் குற்றச்சாட்டு
திருச்சி, ஜூலை 1 காவல்துறையினர் மாமூல் தொல்லையால் பாதிப்பு : ஏஐடியுசி தரைக்கடை, சிறுவியாபாரிகள் சங்கம் குற்றச்சாட்டு
திருச்சி மாவட்ட ஏஐடியுசி தரைக்கடை மற்றும் சிறுகடை வியாபாரிகள் சங்கத்தின் மேற்கு பகுதி பேரவைக் கூட்டம் நேற்று திருச்சி கைத்தறி மகாலில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு நகர விற்பனைக்குழு பிரதிநிதி சுமதி தலைமை தாங்கினார். சசிவர்ணம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்திற்கு N.S. பாட்ஷா, K. தர்மராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி மாவட்ட ஏஐடியுசி மாவட்ட பொருளாளர் G. ராமராஜு சங்கக் கொடியினை ஏற்றி வைத்து கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இப்பேரவைக் கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஏஐடியுசி பொதுச்செயலாளர் மாமன்ற உறுப்பினர் சுரேஷ், தரைக்கடை சிறுகடை மாவட்ட செயலாளர் அன்சர்தீன், மாவட்ட தலைவர் S. சிவா மற்றும் மாவட்ட துணைத்தலைவர் சுரேஷ்முத்துச்சாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
கூட்டத்தின் நிறைவாக K. நாகராஜ் நன்றி கூறினார்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஏஐடியுசி பொதுச் செயலாளர் பேசுகையில், திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர், தில்லை நகர், தென்னூர், ஆழ்வார்தோப்பு, வயலூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெருவோர சிறுகடை வியாபாரிகள் காவல்துறையினுடைய மாமூல் தொல்லையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 2015-ஆம் ஆண்டு தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரச் சட்டத்தின்படி மாநகராட்சி நிர்வாகம் முழுமையாகச் செயல்படாததே இதற்கு முக்கியக் காரணமாகும்” என்று குற்றம் சாட்டினார்.
மேலும் மாநகராட்சி வெண்டிங் கமிட்டியில் (Vending Committee) முறையான தீர்மானம் இயற்றி, வியாபாரிகளிடம் காவல்துறை தலையிடுவதையும் மாமூல் வசூலிப்பதையும் உடனடியாக நிறுத்த வேண்டும். மாநகராட்சி நிர்ணயிக்கும் கட்டணத்தை மட்டுமே வியாபாரிகளிடம் வசூலிக்க வேண்டும். தரைக்கடை மற்றும் சிறுகடை வியாபாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய அடையாள அட்டைகளைத் தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும்.
வியாபாரிகளுக்கான கடன் உதவித் திட்டங்கள் 10,000 முதல் தற்போது உயர்த்தப்பட்டுள்ள ரூ. 15 லட்சம் வரை வழங்கப்படுகிறது அதை ஏனோதானோ என்று வழங்காமல் தனித்தனி சிறப்பு முகாம்கள் அமைத்து முறையாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்
மேலும் நாட்டின் பொருளாதாரத்தில் 75% பங்களிப்பை அள்ளித் தரும் தெருவோர வியாபாரிகளின் இந்த நியாயமான கோரிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாகக் கவனித்து, உரிய அங்கீகாரமும் பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று இப்பேரவைக் கூட்டத்தின் வாயிலாக நிர்வாகிகள் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர்.