செல்போன் டவரில் பேட்டரி திருட முயன்ற 6 பேரிடம் காவல்துறையினர் விசாரணை
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே பி.கே.அகரம் கிராமத்தில் உள்ள தனியார் செல்போன் டவரில் இருந்த பேட்டரியை திருட முயன்ற 6 பேரை சிறுகனூர் போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
பி. கே. அகரம் கிராமத்தில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இரண்டு செல்போன் டவர் கோபுரம்அமைந்துள்ளது.இந்த 2 டவரிலும் 6 பேட்டரிகள் உள்ளது. ஒரு பேட்டரியின் மதிப்பு ரூ. 2.5 லட்சம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலையில் செல்போன் டவரில் உள்ள பேட்டரிகளை திருடுவதற்க்காக சரக்கு வாகனத்தில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் பேட்டரிகளை திருட முயன்றனர். இதில் 3 பேட்டரிகளை கழற்றி வெளியே எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அதிலிருந்த ஒலிக்கும் அபாயமணி சத்தம் தனியார் செல்போன் டவர் நிர்வாகிகளுக்கு சென்றுள்ளது.இதையடுத்து செல்போன் டவர் நிர்வாகிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டு சம்பவ இடத்திற்க்கு வந்துள்ளனர்.மேலும் தேசிய நெடுச்சாலையில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரும் சம்பவ இடத்திற்க்கு வந்துள்ளனர்.போலீசார் மற்றும் செல்போன் டவர் நிர்வாகிகளை கண்டதும் 2 பேர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.மற்றவர்களை சுற்றி வளைத்து பிடித்ததில் திருச்சி வடக்கு தாராநல்லூர் காமராஜ் பகுதியைச் சேர்ந்த சரக்கு வாகன டிரைவர் 34 வயதான மணிகண்டன்,வாகனத்தில் வந்த 28 வயதான அருண், 34 வயதான
தமிழரசி,29 வயதான சசி,35 வயதான சந்தியா 17 வயதான சிறுவன் உட்பட 6 பேர் என தெரியவந்தது. பின்னர் 6 பேரை பிடித்து சிறுகனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சிறுகனூர் போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இவர்கள் வந்த சரக்கு வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் அமைக்கப்பட்ட செல்போன் டவரில் பேட்டரிகளை திருட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.