திருச்சி அகதிகள் முகாமில் காவல்துறையினர் திடீர் சோதனை
:திருச்சி மத்திய சிறை வளாகத்தில் வெளிநாடுகளை சேர்ந்த அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் போலி பாஸ்போர்ட், போதைப்பொருள் கடத்தல், கள்ளத்தோணியில் இந்தியா வருதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வழக்குகளில் இருந்து ஜாமீன் பெற்றாலும் வழக்கு முடியும் வரை சொந்த நாட்டிற்கு அனுப்பப்படாமல் சிறப்பு முகாமிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிறப்பு முகாமில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தாலும், வருவாய்த்துறையினரின் கட்டுப்பாட்டிலேயே செயல்பட்டு வருகிறது. முகாமில் உள்ளவர்களை வெளியே இருந்து குடும்பத்தினர் வந்து பார்த்து செல்லவும் அனுமதிக்கப்படுகிறது. மேலும் திருச்சி சிறப்பு முகாமில் தற்போது வரை இலங்கை, வங்காளதேசம், நைஜீரியா, ருவாண்டா, பல்கேரியா, தெற்கு சூடான், பாகிஸ்தான், சீனா, இங்கிலாந்து, இந்தோனேஷியா, தாய்லாந்து உள்பட பல நாடுகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை முதல் மாநகர காவல்துறை அதிகாரிகள் 150க்கும் மேற்பட்டோர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தரப்பில் கூறிய தகவல்.. சிறையில் இருக்கும் கைதிகள், மற்றும் அகதிகள் திருட்டு தனமாக செல்போன்கள், லேப்டாப்கள் பயன்படுத்துவதாக புகார்கள் வந்ததன் அடிப்படையில் இந்த திடீர் சோதனை நடத்தியதாக தெரிவித்தனர். மேலும் சந்தேகபடும் சில நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளபட்டது. இந்த சோதனையில் 4 செல்போன், 1 லேப்டாப், 1 மோடம் ( wi-fi கருவி) கைப்பற்றபட்டுள்ளதாக கூறினர்.