திருச்சி திருவெறும்பூர் பெல் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 63). இவர் சம்பவத்தன்று இரவு 11 மணியளவில் சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள கலைஞர் அறிவாலயம் பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னல் அருகே அவரது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு சீருடை அணியாத நபர் ஒருவர் நான் போலீஸ் என கூறி ஏன்? போக்குவரத்து சிக்னலை மீறி வருகிறாய்? வண்டியை நிறுத்து என கூறியுள்ளார். பின்னர் அந்த மோட்டார் சைக்கிளை நான் கோட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்கிறேன்.
நீ நாளை காலை வந்து மோட்டார் சைக்கிளின் ஆவணங்களை கொண்டு வந்து காட்டி விட்டு வண்டியை பெற்றுக் கொள் என்று கூறி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து நேற்று கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாதனிடம் ராஜ்குமார் செல் போனில் புகாராக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் ராஜ்குமாரை நேரில் வந்து மோட்டார் சைக்கிள் குறித்த ஆவணங்களுடன் புகார் கொடுக்க கேட்டுக் கொண்டனர்.