பொன்மலை ஜி கார்னர் ரயில்வே பாலம் பழுது: போக்குவரத்து மாற்றம்
திருச்சி, ஜன.13 திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலை, பொன்மலை ரயில்வே பாலம் பழுதடைந்துள்ளதால் மாநகரில் போக்குவரத்து மாற் றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதுரை, திண்டுக்கல் மற்றும் தென் மாவட்டங்களிலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் கனரக வாகனங்கள் திண்டுக்கல், வையம்பட்டி, மணப்பாறை, குளித்தலை, முசிறி, துறையூர், பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும்.
சென்னை, பெரம்பலூர் மார்க்ககத்திலிருந்து திண்டுக்கல், மதுரை மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் கனரக பெரம்பலூரிலிருந்து வாகனங்கள் துறையூர், முசிறி, குளித்தலை, மணப்பாறை, வையம்பட்டி, திண்டுக்கல் வழியாக செல்ல வேண்டும். சென்னை, பெரம்பலூர், அரியலூர் மார்க்கத்திலிருந்து புதுக்கோட்டை வழியாக செல்லும் கனகர வாகனங்கள் பால்பண்ணை, துவாக்குடி, திருச்சி புதிய சுற்றுச்சாலை வழியாக சென்று வர வேண்டும். சேலம், நாமக்கல் மார்க்கத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் கனரக வாகனங்கள் முசிறி, குளித்தலை, மணப்பாறை, விராலிமலை வழியாக சென்று வரவேண்டும். கோவை, கரூர் மார்க்கத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் கனரக வாகனங்கள் குளித்தலை, மணப் பாறை, விராலிமலை வழியாக சென்று வரவேண்டும்.
அரியலூர் மார்க்கத்திலிருந்து மதுரை செல்லும் கனரக வாகனங்கள் நெ.1 டோல்கேட், முசிறி, குளித்தலை, மணப்பாறை, திண்டுக்கல் வழியாக சென்று வரவேண்டும். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி, புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையிலிருந்து சென்னைக்கு செல்லும் கனரக வாகனங்கள் மணிகண்டம், வண்ணாங்கோயில், மணப்பாறை, குளித்தலை, முசிறி, துறையூர் பெரம்பலூர் வழியாக செல்லவேண்டும். திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் பயணிகள் பேருந்துகள் டிவிஎஸ்டோல்கேட், விமானநிலையம், திருச்சி புதிய சுற்றுச்சாலை, துவாக்குடி வழியாக செல்லவேண்டும்.
தஞ்சாவூரிலிருந்து திருச்சி வரும் பயணிகள் பேருந்துகள் வழக்கமாக வரும் பாதையான திருவெறும்பூர், பால்பண்ணை வழியாக வரவேண்டும். மேலும், கூடுமான வரை அனைத்து வாகனங்களும் பொன்மலை ரயில்வே பாலம் வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.