சிமெண்ட் கலவை லாரியை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்
திருச்சி, நவ.7மணப்பாறையில் முழுமையாக சிமெண்ட் சாலை அமைக்கக்கோரி கலவை லாரியை சிறைப்பிடித்து மக்கள் போராட்டம். பேச்சுவார்த்தைக்குபின் பணிகள் மீண்டும் தொடங்கியது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை பஸ் நிலையம் அருகே உள்ள சின்னகடைவீதியில் இருந்து முத்தன்தெரு வழியாக கோவில்பட்டி சாலை செல்லும் சாலை மிகவும் மோசமாக இருந்ததை அடுத்து அதில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. ஆனால் பள்ளமாக உள்ள பகுதியை விட்டு விட்டு மேடாக உள்ள பகுதியில் மட்டும் மீண்டும் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டதை அறிந்த மக்கள் சாலை பணி நடைபெறும் இடத்தில் திரண்டு சிமெண்ட் கலவை லாரியை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை முழுமையாக அமைக்க வேண்டும், பள்ளமான பகுதியை விட்டு விட்டு மேடான பகுதியில் குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டும் சிமெண்ட் சாலை அமைப்பதை ஏற்க முடியாது என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். பின்னர் நகராட்சி அதிகாரிகள் தொலைபேசி மூலம் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேசி முழுமையாக சிமெண்ட் சாலை அமைக்கப்படும் என்று கூறி அதற்காக பணிகளை தொடங்கியதால் மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.