மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் கழிப்பறைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை
திருச்சி, ஆக. 2 திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரின் மையப்பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், கருவூலம், நகரமைப்பு தனி வட்டாட்சியர் , வட்ட வழங்கல் அலுவலகம், சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், கிளை சிறைச்சாலை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகின்றன. இதனால் அரசு அலுவலகங்களை நாடி தினசரி நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ஆனால் அலுவலக வளாகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஒரு கழிப்பறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கழிப்பறை கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை திறக்கப்படாமலேயே உள்ளதால் பொதுமக்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. குறிப்பாக பெண்கள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர்.
எனவே உடனடியாக கழிப்பறையை திறந்து பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரகுழு சார்பில் நகர செயலாளர் ஜனசக்தி உசேன் வட்டாட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.