தொடுமுறை சிலம்பத்திற்கு அரசு சார்பில் கழகம் அமைக்க கோரிக்கை
திருச்சி, ஜூலை 15 தொடுமுறை சிலம்பத்திற்கு அரசு சார்பில் கழகம் அமைத்து, நேர்மையான அதிகாரிகளை நியமிக்க சிலம்பம் ஆசான் காளிமுத்து கோரிக்கை
அரசர் சிலம்பாட்ட கழகம் சார்பில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள புனித ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த சிலம்பாட்ட போட்டியானது ஐந்து வயது முதல் 20 வயது உட்பட்ட மாணவ மாணவிகளுக்கு நடைபெற்றது.
போட்டி விதிமுறையாக நான்கு நபர்களுக்கு ஒரு போட்டி என்ற அடிப்படையிலும், அதேபோல் 5 வயதிற்கு கீழ் 1 நிமிடம் போட்டியும், 5 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 1.30 நிமிடமும் மற்றும் 10 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 2 நிமிடம் போட்டிகள் நடத்தப்பட்டது மேலும் புள்ளிகள் அடிப்படையில் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்திலிருந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட சிலம்பாட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை அரசர் சிலம்பாட்ட கழக மாஸ்டர் காளிமுத்து மற்றும் நிர்வாகி தர்மலிங்கம் ஆகியோர் செய்து இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து அரசர் சிலம்பாட்ட கழகத்தின் ஆசான் காளிமுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஆசான்களின் பெயரில் சிலம்பப் போட்டி நடத்தி வருகிறோம். சிலம்பத்தில் பல பிரிவுகள் இருந்தாலும் அதில் மேம்படுத்தப்பட்டது தொடுமுறை சிலம்பம். இந்த தொடு முறை சிலம்பப் போட்டி பள்ளிக் கல்வித் துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த உண்மையான சிலம்ப போட்டியை மக்கள் மனதில் நிலைநாட்டி வருகிறோம். சிலம்ப விளையாட்டை வியாபாரமாக மாற்ற கூடாது. சீருடை பணியாளர்கள் தேர்வில் சிலம்பத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். இதுபோல அனைத்து துறையிலும் சிலம்ப விளையாட்டிற்கு முன்னுரிமை அளித்து வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும். மேலும் சிலம்ப போட்டி என்ற பெயரில் குழந்தைகளை 5 மணி நேரம், 8 மணி நேரம் தொடர் சிலம்பம் சுற்ற வைத்து கின்னஸ் சாதனை என்ற பெயரில் குழந்தைகளை சோர்வுக்குள்ளாக்கி வருகின்றனர். இதனால் பள்ளிக் கல்வித் துறையால் அங்கீகரிக்கப்பட்ட இந்த தொடுமுறை சிலம்பத்திற்கு அரசு சார்பில் கழகம் அமைத்து, நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என தெரிவித்தார்