செங்கிப்பட்டி ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த செங்கிப்பட்டியில் புதிதாக ஐயப்பன் கோவில் அமைக்கும் பணி கடந்த சில வருடங்களாக நடைபெற்று பணிகள் நிறைவுபெற்றதை அடுத்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கான யாகம் உள்ளிட்ட பூஜைகள் கடந்த 8 ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் புனித நீர் கோபுர கலசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நிறைவு பெற்றது. தொடர்ந்து தர்மசாஸ்தா ஐயப்பன் மூலவர் அபிஷேகம், கன்னிமூல கணபதி, மஞ்சள் மாதா, கருப்பண்ணசாமிக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து 18 ம் படிக்கு சந்தனாதி தைலம், சாந்தி மலர்களால் அர்ச்சனை செய்து 18 ம் படி பூஜை நடைபெற்றது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஐயப்பன் ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பார்ப்பதற்கே ரம்மியமான தோற்றத்தில் ஆலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.