தேசிய நீதிமன்றத்தில் 1192 வழக்குகளுக்கு தீர்வு
திருச்சி, மே15 திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மாநகர காவல் சரகத்திற்குட்பட்ட நிலுவையில் இருந்த 1192 உள்ளூர் மற்றும் சிறப்பு சட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, அபராதமாக ரூ. 6 லட்சத்து 53 ஆயிரத்து 900 விதிக்கப்பட்டதாக மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா தெரிவித்துள்ளார். திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக சத்திய பிரியா,பொறுப்பேற்றதிலிருந்து, திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில், சட்ட விரோதமாக செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், வழிப்பறியில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்திட திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள்.
அதன்படி, நேற்று முன்தினம் திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் திருச்சி மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வந்த தீர்வு காணக்கூடிய 1192 உள்ளூர் மற்றும் சிறப்பு சட்ட வழக்குகளுக்கு தீர்வுக்காணப்பட்டது. இதில் கண்டோன்மெண்ட் சரகத்தில் 221 வழக்குகளும், பொன்மலை சரகத்தில் 22 வழக்குகளும், கே.கே.நகர் சரகத்தில் 80 வழக்குகளும், ஸ்ரீரங்கம் சரகத்தில் 65 வழக்குகளும், தில்லைநகர் சரகத்தில் 520 வழக்குகளும், காந்திமார்க்கெட் சரகத்தில் 67 வழக்குகளும், போக்குவரத்து சம்மந்தமாக 33 வழக்குகளும், மதுவிலக்கு பிரிவில் 184 வழக்குகள் என மொத்தம் 1192 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டும், வழக்கின் எதிரிகளுக்கு ரூ.6,53,900/- அபராதம் விதிக்கப்பட்டது.
திருச்சி மாநகரத்தில் இதுபோன்று லோக் அதாலத் நடைபெறும்போது தீர்வுக்காணகூடிய வழக்குகளை விரைந்து முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா தெரிவித்துள்ளார்.