தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்ரீரங்கம் எல்.எல்.ஏ. நிவாரண உதவி
திருச்சி, ஆக.22 திருச்சி ஶ்ரீரங்கம் நரியன் தெருவில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நேரில் பார்வையிட்டு நிவாரணத் தொகையை வழங்கினார்
திருச்சி ஶ்ரீரங்கம் திருவானைக்காவல் நரியன் தெருவில் தங்கமணி,ஆறுமுகம் பாண்டியன், சூர்யா ஆகியோர் அடுத்தடுத்த குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் பூ தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று தங்கமணி வீட்டில் திடீரென தீப்பற்றியது. இந்த தீ அருகில் இருந்த வீடுகளுக்கு பரவியது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தங்கமணி வீட்டிலிருந்து வெளியே வந்து சத்தமிட்டார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மேலும் வீடுகளில் இருந்த 3 எரிவாயு சிலிண்டர்களில் கசிவு ஏற்படுவதை கண்ட தீயணைப்பு வீரர்கள் அந்த சிலிண்டர்களை உடனடியாக மீட்டு அருகில் உள்ள வாய்க்காலில் வீசி அசம்பாவிதம் ஏற்படுவதை தவித்தனர்.
இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இந்த நிலையில் அந்த பகுதிக்கு சென்ற ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி தீயில் கருகிய வீட்டினை பார்வையிட்டார்.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சொந்த பணத்திலிருந்து நிவாரணத் தொகையை வழங்கி நிவாரண பொருட்களையும் வழங்கினார்.
இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் அவர்களை தொடர்பு கொண்டு தீ விபத்தில் வீடுகளை இழந்த நபர்களுக்கு கலைஞர் கனவு வீடு திட்டம் மூலமாக வீடு கட்டி தரப்படும் என உறுதியளித்தார்.