பள்ளி வாயிலில் தோண்டப்பட்ட பள்ளத்தால் மாணவர்கள் வெளியே வரமுடியாத நிலை: ஆசிரியர்கள், பொதுமக்கள் மறியல்
திருச்சி, டிச.4 திருச்சி புதுக்கோட்டை சாலையில் அரசுக்கு சொந்தமான இடத்தை பள்ளி நிருவாகம் பயன்படுத்தி வந்த நிலையில், அந்த இடத்தை வருவாய்த்துறையினர் கைப்பற்றி பள்ளம் தோண்டியதால், மாணவர்கள் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டித்து ஆசிரியர்கள், பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி புதுக்கோட்டை சாலையில் மாத்தூர் அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 2000 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கான பிரதான பாதை அரசின் பாதை என வருவாய்த்துறை அதிகாரிகள் கையகப்படுத்தினர். தற்பொழுது பள்ளியின் உள்ளே மாணவர்கள் படித்து வரும் நிலையில் வாசலில் பெரிய பள்ளத்தை தோண்டியுள்ளனர். உள்ளே உள்ள மாணவர்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதிகாரிகள் அவர்களே சமாதானப்படுத்தி உள்ளனர்.
ஏற்கனவே இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணனிடம் ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்திய பொழுது இதை நீங்கள் உங்களுக்கு சொந்தமான இடமாக பயன்படுத்த கூடாது. சாலையை வேண்டுமென்றால் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இந்த நிலையில் வருவாய் துறை அதிகாரிகள் திடீரென பெரிய பள்ளத்தை தூண்டி உள்ளதாக ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.