காவிரி தண்ணீரை மானாவாரி நிலங்களுக்கு பயன்படுத்துவது குறித்த ஆய்வு கூட்டம்
திருச்சி, மார்ச் 4 திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள நாகையநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கரட்டுப்பட்டி கிராமத்தில் காவிரி ஆற்றில் இருந்து நாகையநல்லூர் ஏரிக்கு கொண்டுவரப்படும் தண்ணீரை மானாவாரி நிலங்களுக்கு பயன்படுத்துவது குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
ஆய்வுக் கூட்டத்திற்கு முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்தார். பொதுப்பணித்துறை கோட்ட செயற்பொறியாளர் அறிவழகன், உதவி செயற்பொறியாளர் ஞானமணி, பிரபு ,ஒன்றிய கவுன்சிலர் தீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சித் தலைவர் ராமதாஸ்
அனைவரையும் வரவேற்றார்.
காவிரி ஆற்றில் இருந்து நாகையநல்லூர் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்த முன்னெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக நாகையநல்லூர் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்த பின்னர் அந்த தண்ணீரை அருகிலுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகளும் பயன்பெறும் வகையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து சொட்டுநீர் பாசனம் மூலமும் விவசாயத்திற்கு உதவிட திட்டமிடப்பட்டுள்ளது.இதன் மூலம் 3 ஆயிரம் ஏக்கர் அளவிலான மாணவாரி நிலங்கள் பயன்பெறும்.
இது குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்கள் கூறும் பொழுது இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் நாகையநல்லூர், காடுவெட்டி, நத்தம், ஏழூர்பட்டி, எம். களத்தூர்,
வாழ்வேல்புத்தூர், பிடாரமங்கலம், புத்தூர், தோளூர்பட்டி உள்ளிட்ட ஒன்பது கிராமங்கள் பயன்பெறும்.
ஆடிப்பட்டத்தில் மட்டும் விவசாயம் செய்யும் விவசாயிகள் இதர மாதங்களிலும் பயிர்களை சாகுபடி செய்து பயன்பெறலாம்.
என்று தெரிவித்தனர்.
திட்ட செயல் விளக்கம் காணொளி காட்சி மூலம் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது..கூட்டத்தில் 12 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.திமுக ஒன்றிய செயலாளர் தங்கவேலு,விவசாய சங்கத் தலைவர் ராதா சுப்ரமணியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அப்பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள்,விவசாய சங்கத்தினர் பலர் உடன் இருந்தனர்.