பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்த அரசு பள்ளி மாணவர்கள்
தா .பேட்டை அருகே காருகுடி அரசு உயர்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்யும் விழா நடைபெற்றது.
தா.பேட்டை ஒன்றியத்தில் கார்குடி அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்யும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியை முன்னிட்டு பள்ளி வளாகம் முழுவதும் தோரணங்களாலும் வண்ண கோலங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகள் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுத உள்ளதால் பெற்றோர்களின் நல்லாசியுடன் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி நடத்தப்பட்ட பாத பூஜை விழாவிற்கு பெற்றோர்கள் அனைவரும் பள்ளிக்கு வருகை புரிந்திருந்தனர்.
மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுக்கு மாலை அணிவித்து பாதங்களை பன்னீர் மற்றும் பால் கொண்டு கழுவி மஞ்சள் குங்குமம் விட்டு மலர் தூவி வழிபாடு செய்தனர். தங்களுடைய குழந்தைகள் அதிக மதிப்பெண்கள் பெறவும், ஆரோக்கியத்துடன், நற் புகழ் பெற்று வாழ்ந்திடவும் பெற்றோர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மாணவ மாணவிகள் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்யும் நிகழ்வு மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. இந்த விழா தங்கள் குழந்தைகள் மீது பாசத்தை அதிகப்படுத்தி உள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். மாணவிகள் பெற்றோர்களின் மதிப்பை புரிந்து கொள்ளும் விழாவாக இருந்தது எனவும் தெரிவித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். இந்த விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு அனைவருக்கும் வாழ்த்து கூறினர்.மனோவா மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும் மதிய விருந்து அளிக்கப்பட்டது.